
ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராகத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.
புதுடெல்லி:பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாரதிய ஜனதா மட்டும் 240 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. எனவே மத்தியில் அமையும் புதிய ஆட்சி கூட்டணி ஆட்சியாகவே இருக்கும் என்பதால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. புதிய அமைச்சரவை பதவியேற்க ஏதுவாக 17-வது மக்களவையை கலைக்க பரித்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. பிரதமர் மோடி பதவியேற்பு விழா வரும் 8-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவைச் சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, காபந்து பிரதமராகத் தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

