
சென்னையை சேர்ந்த டாக்ஸி டிரைவரின் மகள் கீர்த்தனா பாலகிருஷ்ணன் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசன் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 17 ஆம் தேதி வரையில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு புறம் இருக்க கடந்த 9 ஆம் தேதி மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான ஏலம் நடந்தது.
இதில், இன்னும் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத வீராங்கனையான விருந்தா தினேஷ் யுபி வாரியர்ஸ் அணியில் ரூ.1.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இவரது அடிப்படை விலை என்னவோ ரூ.10 லட்சம் தான்.
இதே போன்று காஷ்வி கவுதம் ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இவரது அடிப்படை விலையும் ரூ.10 லட்சம் மட்டுமே. ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடவில்லை. இந்த நிலையில் தான், இவர்களது வரிசையில் சென்னையைச் சேர்ந்த டாக்ஸி டிரைவரின் மகள் கீர்த்தனா பாலகிருஷ்ணன் ரூ. 10 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிறந்தவர் கீர்த்தனா பாலகிருஷ்ணன். தற்போது 23 வயதாகும் கீர்த்தனா, தமிழக அணிக்காக 3 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். கடந்த 2021 – 22 பிரேயர் டிராபியில் 102 ரன்கள் குவித்துள்ளார்.
கீர்த்தனா பாலகிருஷ்ணனின் தந்தை சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கீர்த்தனா, தமிழக கிரிக்கெட் வீரரான அபினவ் முகுந்தின் தந்தை டிஎஸ் முகுந்தின் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார்.
ஸ்பின்னராக பயிற்சி பெற்று வந்த கீர்த்தனா, அதன் பிறகு பேட்டிங்கிலும் ஆர்வம் காட்டி பயிற்சி பெற்றுள்ளார். டி.எஸ்.முகுந்த் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, தனது மாணவர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களையும் வழங்குகிறார்.
கீர்த்தனா ஒரு எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். அவர் தமிழ்நாடு மகளிர், இந்திய பசுமை மகளிர், தென் மண்டல மகளிர் மற்றும் ஆரஞ்சு டிராகன்ஸ் மகளிர் உள்பட 4 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்ற கீர்த்தனா பாலகிருஷ்ணன் குறித்து தினேஷ் கார்த்திக் கூறியிருப்பதாவது: கீழ்மட்டத்தில் உள்ள பல கிரிக்கெட் வீரர்களிடமிருந்து ஒரு பைசா கூட வசூலிக்காமல் கிரிக்கெட் பயிற்சி அளித்து வரும் டிஎஸ் முகுந்த் கிரிக்கெட் அகாடமிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கீர்த்தனா பாலகிருஷ்ணனுக்கும் தனது வாழ்த்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


