சென்னை:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் அமைச்சர் சேகர்பாபு அவருடைய குடும்பத்தினருடன் வந்ததால் பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசி அனைத்து பெருமாள் கோயில்களிலும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீஙக்ம் ரங்கநாதர் கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சொர்க்க வாசலைக் கடந்து செல்லவும், சுவாமியைத் தரிசனம் செய்யவும் பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு அவரது குடும்பத்தினருடன் நேற்று ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்ததால் இரவு முழுவதும் சுவாமியைத் தரிசிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்த மக்களை அனுமதிக்காமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: நேற்றைய தினம் அதிகாலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின், பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வுக்காக, ஆண்டுதோறும் கோவிலுக்குள் சென்று சொர்க்கவாசல் கடக்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலித்து வருகிறது இந்து சமய அறநிலையத் துறை.
இந்த ஆண்டும் பெருவாரியான பக்தர்கள், இந்தப் புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ள, கட்டணம் செலுத்தி, நடுநிசியிலிருந்தே காத்துக்கொண்டிருக்கையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவருடைய குடும்பத்தினருடன் வந்ததால், பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்திருக்கின்றனர்.
குறிப்பாக, அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்த பக்தர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் விரட்டியிருக்கிறார்.
அமைச்சர் சேகர்பாபு அவர்களின் குடும்பம், ஒரு புண்ணிய தினத்தன்று கோவில் நிகழ்வில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
உடலில் எண்ணெய்யைப் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற பழமொழியை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஒரு புண்ணிய தினத்தன்று, பகவான் சன்னிதியில் அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.