
மதுரை: ‘போதைப்பொருட்களால் மாணவர்கள் சிந்திக்கும் திறன் குறைந்து வருகிறது’ என ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது.
கூல் லிப் போதைப்பொருள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட நபர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியதாவது: பள்ளி, கல்லூரி மாணவர்கள் ‘ ‘கூல் லிப்’ என்ற போதைப்பொருளுக்கு அதிகளவு அடிமையாகின்றனர். இது போன்ற போதைப்பொருளை பாதுகாப்பற்ற உணவுப்பொருள் என அறிவித்து ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யக் கூடாது.
போதைப்பொருட்களிலிருந்து நமது குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம். இதனால், இளம் தலைமுறையினர் சிந்திக்கும் திறன் குறைந்து வருகிறது. மாணவர்கள் சண்டையிட்டு கொள்வது போன்ற சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்களே காரணம். பாதிக்கும் மாணவர்களை மீட்க எவ்வாறு நடவடிக்கை எடுக்கலாமென முடிவெடுக்க வேண்டும். ‘கூல் லிப்’ தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது எனக்கூறிய நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.


