
தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசியலையே புரட்டிப்போட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை நீதிமன்ற தீர்ப்பு பற்றி கூறும்போது கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து அப்பீல் செய்யப்பட்டு கடைசியாக தீர்ப்பு வந்துள்ளது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் நல்ல தீர்ப்பு. தமிழக பா.ஜனதா சார்பில் தீர்ப்பினை வரவேற்பதாக தெரிவித்தார்.
மேலும் இத்தீர்ப்பானது ஊழல் இல்லாத சமுதாயத்தை படைப்பதற்கு அடித்தளமாகவும் படிக்கல்லாக அமையும். முதலில் ஒரு அமைச்சர் சென்றார். ஏற்கனவே ஊழல் வழக்கில் சிக்கி செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக புழல் ஜெயிலில் இருக்கிறார். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிறது.
இப்போது தி.மு.க.வின் மூத்த அமைச்சர் அதுவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். இதே பட்டியலில் இன்னும் சில அமைச்சர்கள் இருக்கிறார்கள். இது ஆரம்பம்தான். அடுத்த ஆண்டு மத்தியில் இன்னும் சிலருக்கும் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இத் தீர்ப்பை பொறுத்தவரை தனிப்பட்ட மனிதரின் பாதிப்பு ஆகாது. தி.மு.க.வின் அரசியலையே புரட்டி போடும் தீர்ப்பு இது. நீதிமன்றத்தையும் ஆளும் கட்சியையும் சம்பந்தப்படுத்தி பேசுபவர்கள் அரசியலில் இருக்கவே லாயக்கில்லாதவர்கள்.
பா.ஜனதாவில் சேருபவர்கள் மட்டும் விமோசனம் அடைவதாக கூறுவது தங்கள் மீதான பிரச்சினைகளை மக்களிடம் இருந்து திசை திருப்புவதற்குத்தான் என்று கூறினார்.
அதே சமயம் அண்ணாமலை உரைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற குழுதலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவிக்கையில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் தன் தரப்பு வாதத்தை முன் வைத்து விடுதலை பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவர் ஓடி ஒளிய கூடியவர் அல்ல. பல வழக்குகளை தி.மு.க. பார்த்து இருக்கிறது. எனவே இந்த வழக்கையும் எதிர் கொள்வார்கள்.

