
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிப்ரவரி 14-ம் தேதி சந்திப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள்குறித்து ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 54 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மத்திய அரசுப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுள்ளது. சந்திப்புகுறித்து மத்திய அரசு அறிவித்ததை அடுத்து, சிகிச்சை பெற ஜக்ஜித் சிங் சம்மதம் தெரிவித்தார்.
எனினும், பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பது தொடர்பாகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்று மற்றொரு விவசாய சங்க தலைவரான சுக்ஜித் சிங் ஹர்டோஜாண்ட் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ஜக்ஜித் சிங் தலேவால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விவசாயிகள் வெளியிட்டனர்.
