
உரிமைக்காகப் போராடிய பகுதி நேர ஆசிரியர்களைத் திமுக அரசு கைது செய்துள்ளதற்குப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பணி நிலைப்புச் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திப் பகுதி நேர ஆசிரியர்கள் பத்து நாட்களாகப் பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களைச் சந்திக்க வந்தார். நயினார் நாகேந்திரனும் பா.ஜ.க.வினரும் ஆசிரியர்களைப் பார்ப்பதற்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், கல்வித்துறையின் தூண்களாக விளங்கும் ஆசிரியர்களைத் திமுக அரசு கைது செய்திருப்பது அராஜகமான செயல் என்று தெரிவித்தார்.




