
புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான பஞ்சம் காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குடிநீரை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது, காரைக் கழுவுவது ஆகியவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
தலைநகர் டில்லியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது போன்ற சூழ்நிலையில், தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு டில்லி அமைச்சர் அதிஷி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக ஆய்வு செய்ய 200 குழுக்களை அமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்கும் பணிகளில் ஈடுபடும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன்படி, இக்குழுவினர் வீடு வீடாகச் சென்று சோதனை செய்ய உள்ளனர். அப்போது, குழாய்மூலம் குடிநீரில் கார் கழுவுவது, தண்ணீர் தொட்டி நிரம்பி வடிய செய்தல், வீட்டு உபயோக குடிநீரை வணிக காரணங்களுக்காகப் பயன்படுத்துவது, வீட்டு கட்டுமான பணிகளுக்குக் குடிநீரை பயன்படுத்துவது ஆகியனவற்றை செய்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.


