
சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதியை அறிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் ரேஷன் கார்டுகளை காண்பித்து நியாயவிலைக் கடைகள் மூலம் 6 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் அரசு சார்பில் டோக்கன் விநியோகிக்கப்பட உள்ளது. சென்னையில் வசிக்கும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதி கிடைக்கும்.
அதேபோல் சென்னையில் ரேஷன்கார்டு இல்லாதவர்களுக்கும் புயலால் பாதிக்கப்பட்டிருந்தால் வெள்ள நிவாரண நிதியை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நிதியுதவியை கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் வசிக்கும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வெளியூர்காரர்களுக்கு தமிழ்நாடு அரசின் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களுக்கும் விண்ணப்பம் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும். அந்த விண்ணப்பத்தில் தாங்கள் சென்னையில் வசித்த பகுதி மற்றும் வங்கி எண்ணை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதிகாரிகள் அந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் நேரில் ஆய்வு செய்து, விண்ணப்பதாரர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மிக்ஜாம் புயல் நிவாரண நிதி வழங்கப்படும்.



