
கோவை:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்தப் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டுக் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் அ.தி.மு.க. மாநில நிர்வாகியான சஜீவனிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். சஜீவன் கொடநாடு எஸ்டேட்டில் மர வேலைப்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளார். எனவே, அவரிடம் கொடநாடு வழக்கு மற்றும் எஸ்டேட் தொடர்பான விவரங்களைப் பெற முடிவு செய்து அவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதனை ஏற்று இன்று சஜீவன் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ. சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் கொடநாடு சம்பவம் குறித்தும், அங்கு நடந்தவை பற்றித் தெரியுமா? கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளைபற்றித் தெரியுமா? எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுப் போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

