
காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமையென அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலூர்:வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை.கர்நாடகம் தங்களிடத்தில் தற்போது தண்ணீர் இல்லை என்கிறது. அதற்காக மழை பெய்து ஏராளமாகத் தண்ணீர் வந்தால் மட்டும்தான், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாகத் தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது.
கையளவு தண்ணீர் இருந்தாலும், அதை எங்களுக்குப் பங்கிட்டுத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினால் அதனால் ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல. நாம் அனைத்துக் கட்சியைக் கூட்ட முடியாதா என்றால் கூட்டலாம். ஆனால் வரும் 21 ஆம் தேதி இதில் இந்த வழக்கு வருகிறது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் வரும்போது என்ன நடந்தது என்பதை எங்கள் மூத்த வழக்கறிஞர் தெரிவிக்க இருக்கிறார்கள். அதைக் கேட்டபிறகு உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதற்குக் கட்டுப்பட வேண்டும். அதற்குப் பிறகு நமக்குச் சாதகமாக இல்லை என்றால் அடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி என்ன செய்வது என்று யோசிக்கலாம். இப்போது நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். எனக் கூறினார்.



