
மாரண்டஅள்ளி:
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.
முன்னதாகக் கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோப்பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டுக் காளையை விரட்டிச் சென்றனர்.
இதனைக் காண சுற்றுவட்டார பகுதியிலிருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர்.
விழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான மாரண்ட அள்ளிப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



