
சென்னை புழல் சிறைக்கு அழைத்து வரப்படும் வழியில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
பெண் காவலர்களை அவமதிக்கும் வகையில் பேசிய பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் காவல் துறையினர் தேனியில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரின் அறையில் கஞ்சா இருந்ததை அடுத்து அவர்மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இரு பிரிவினர் இடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்தது உள்பட பல்வேறு வழக்குகள் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டது.
வழக்குகள் தொடர்ந்ததை அடுத்து அவர்மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கோவை மத்திய சிறையிலிருந்து சவுக்கு சங்கர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


