
தப்பிச் சென்ற ஐந்து கைதிகளும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டவர்கள்.
மோரிகான்:அசாம் மாநிலம் மோரிகான் மாவட்ட சிறைச்சாலையிலிருந்து விசாரணைக் கைதிகள் 5 பேர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தப்பி ஓடிய கைதிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஐந்து கைதிகளும் மோரிகான் மற்றும் சோனித்பூர் மாவட்டங்களில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் தப்பிச் சென்றது குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், “கைதிகள் 5 பேரும் அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறையின் இரும்பு கிரில்லை உடைத்து வெளியேறி உள்ளனர். பின்னர் படுக்கை விரிப்புகள், போர்வைகள், லுங்கிகளை கயிறாகத் திரித்து அதன்மூலம் 29 அடி உயர காம்பவுண்டு சுவரில் ஏறி மறுபக்கம் இறங்கி தப்பிச் சென்றுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிறை பாதுகாப்பு குளறுபடிகள், பாதுகாப்பில் அதிகாரிகள் செய்த தவறுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.




