யாரைக் காப்பாற்றத் திமுக அரசு துடிக்கிறது? – அன்புமணி வினா..!

Advertisements

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்துள்ள திமுக அரசு யாரைக் காப்பாற்றத் துடிக்கிறது? என்று பாமக தலைவர் அன்புமணி வினவியுள்ளார்.

பகுஜன் சமாஜம் கட்சித் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொண்டுவர அவர் குடும்பத்தினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அடுத்தடுத்து திமுக அரசு முட்டுக்கட்டைகளைப் போட்டு வருவதற்குப் பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதைத் தொடர்ந்து தான் இந்த வழக்கின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வரும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிச் சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.

அதைத் தாங்கிக் கொள்ள முடியாத தமிழக அரசு, உடனடியாக உச்சநீதிமன்றத்துக்குச் சென்று மேல்முறையீடு செய்தது. அதை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது செல்லும் என்று அக்டோபர் 10-ஆம் நாள் தீர்ப்பளித்தது.

இந்நிலையில் சிபிஐ விசாரணையை நிறுத்தி வைக்க ஆணையிட வேண்டும் என்று கோரி இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் படுகொலை செய்யப்பட்டதில் தொடங்கி, சிபிஐ விசாரணையை தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்திருப்பது வரை திமுக அரசின் அனைத்து செயல்பாடுகளும் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வலுச் சேர்க்கும் வகையிலேயே உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *