
விஜய்யை கண்டு தமிழக அரசு பயந்துள்ளதாகத் தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் விமர்சித்து உள்ளார்.
சென்னை கமலாலயத்தில் நேற்று தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தி.மு.க.வுடன் அதன் கூட்டணி கட்சிகள் தற்போது இணக்கமாக இல்லை என்றும், திருமாவளவன், வேல்முருகன், கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்மறை கருத்துகளைத் தெரிவித்து வருவதாகக் கூறினார்.
மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்கான பெருமை பெரியார், அண்ணாவையே சேரும் என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு, அண்ணாவுக்கு முன்பே சுதந்திரப் போராட்டத்தில் பெண்கள் போராடியுள்ளனர் என்றும், இது ஆண்டாள் வளர்த்த தமிழ் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் அரசியல் வருகையால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு கிடையாது என்றும், விஜய்யை கண்டு தமிழக அரசு பயந்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால் மாநாட்டுக்கு இடம் என அனைத்துக்கும் தடங்கல் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தனியார் பேருந்துகள் விஜய் மாநாட்டுக்குச் சென்று விடக் கூடாது என்பதற்காகவே, அரசு பேருந்துகளைத் தமிழக அரசு வாடகைக்கு வாங்குகிறதோ என்ற எண்ணம் எழுந்துள்ளதாகக் கூறினார்.

