அம்பத்தூரில் பார் உரிமையாளர் வீட்டில் ரூ.50 லட்சம்பணம் மற்றும் 50 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த
கொள்ளையர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.
அம்பத்தூர்: அம்பத்தூர், ஞானமூர்த்தி நகர், விட்டல் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ். அம்பத்தூரில் 3 டாஸ்மாக் பார்களை நடத்தி வருகிறார். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகக் குடும்பத்துடன் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றார். நேற்று இரவு அவர்கள் திரும்பி வந்தபோது வீட்டின் வெளிப்புற கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 50 பவுன் நகை ரூ.50 லட்சம் ரொக்கம், ரூ.2 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து அம்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அலமேலு மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குப் பதிந்து இருந்த ரேகைகளைக் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். ராஜேஷ் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிைச காட்டி உள்ளனர். அவர்களைப் பிடிக்கப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அப்பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். அம்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாகக் கொள்ளை சம்பவம் அதிகரித்து உள்ளது. போலீசார் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி கொள்ளையர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

