
நீலகிரியில் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தற்கொலைக்குத் தூண்டியதாகக் காவலரைப் போலீஸ் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே அணிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவருடைய மனைவி சசிகலா (வயது 27). இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தையும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாகத் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சசிகலா அதே கிராமத்தில் உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், சசிகலாவுக்கும், மஞ்சூர் அருகே சிவசக்தி நகரை சேர்ந்தவரும், ஊட்டியில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வந்த கண்ணன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாகக் கண்ணன் ஆசை வார்த்தை கூறி சசிகலாவுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். ஆனால் தன்னை விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்யக் கண்ணன் முடிவு செய்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கூறி வந்துள்ளார். ஆனால், கண்ணன் மறுத்து விட்டதால், இதனைத் தொடர்ந்து சசிகலா தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் கடந்த 21ம் தேதி விஷம் அருந்தினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சகிச்சை பெற்று வந்த சசிகலா சிகிச்சை பலனின்றி 22ம் தேதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, கடந்த 23ம் தேதி கண்ணனுக்கு திருமணம் முடிந்து விட்டது. சசிகலாவின் செல்போனை ஆய்வு செய்தபோது அதில் கண்ணனும், சசிகலாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தது. இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷனில் மீண்டும் புகார் அளித்தனர்.
தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி சந்தேக மரணம் என்ற வழக்கை, தற்கொலைக்குத் தூண்டுதல் என்று மாற்றிக் கண்ணனை கைது செய்தனர். நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டிக் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, கண்ணனை, எஸ்.பி. சுந்தரவடிவேல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

