தங்கலான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பா.இரஞ்சித் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளாராம்.
வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி தற்போது கோலிவுட்டில் டாப் இயக்குனராக வலம் வருபவர் பா.இரஞ்சித். அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற மாஸ் ஹிட் படங்களை கொடுத்த பா.இரஞ்சித், அடுத்ததாக இயக்கிய படம் தான் தங்கலான். நடிகர் விக்ரம் உடன் அவர் முதன்முறையாக இணைந்து பணியாற்றிய படம் இதுவாகும். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார்.
தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் உடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. இருந்தாலும் படத்தின் சக்சஸ் மீட்டை அண்மையில் நடத்தி முடித்தது தங்கலான் படக்குழு.
அந்த சக்சஸ் மீட்டில் தங்கலான் 2 உருவாகும் என விக்ரம் ஒரு புறம் சொல்ல, மறுபுறம் தானும் ஞானவேல் ராஜாவும் மாஸ் நடிகரின் படத்துக்காக மீண்டும் இணைய உள்ளதாக ஒரு அப்டேட்டை கொடுத்திருந்தனர். அந்த மாஸ் நடிகர் வேறுயாருமில்லை நடிகர் சூர்யா தான். அவரை வைத்து தான் பா.இரஞ்சித் படம் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அநேகமாக இது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜெர்மன் என்கிற படமாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே நடிகர் சூர்யா கைவசம் கங்குவா, வெற்றிமாறனின் வாடிவாசல் போன்ற படங்கள் உள்ள நிலையில், அந்த லைன் அப்பில் ஜெர்மன் படமும் லேட்டஸ்டாக இணைந்துள்ளது. அதேபோல் பா.இரஞ்சித்தும் சார்பேட்டா பரம்பரை 2 படத்தை இயக்க உள்ளார். கைவசம் உள்ள படங்களை முடித்த பின்னர் சூர்யாவும், பா.இரஞ்சித்தும் இணைந்து ஜெர்மன் படத்தில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
