எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை மக்கள் நம்ப மாட்டார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை:சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 4 கோடியே 42 லட்சம் ஒமெப்ரஸோல் (Omeprazole) மருந்துகள் கையிருப்பு உள்ளன; அது அல்சர் போன்ற வியாதிகளுக்குத் தரப்படுகிறது. போமெபிசோல் (Fomepizole) 4 கோடி 42 லட்சம் மருந்துகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ளது.
மருந்துகள் கையிருப்பு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் வெள்ளை அறிக்கை விட வேண்டும் எனக் கூறியுள்ளார் அதற்கும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மருந்துகள் இல்லாததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலைத் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள். ஒரே ஒரு மருந்தைச் சொல்லிக் கையிருப்பு இல்லையென ஈபிஎஸ் கூறினார்.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மேற்குறிப்பிட்ட மருந்துகள் உள்ளதா என்பதை அதிமுகவினர் கேட்டறிந்து கொள்ளலாம். மருந்துகள் கையிருப்பு உள்ளதை காட்டினால், எதிர்க்கட்சி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்வதுதான் அவரது தார்மீக கடமையாக இருக்கும். அதைச் செய்வீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

