
வடமேற்கு மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகர் விமான நிலையத்தில் வைத்து, நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் வெற்றி பெற்றுள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை குல்விந்தர் கவுர் என்ற மத்திய தொழிற்பாதுகாப்புப்படை பெண் காவலர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது.
மத்திய பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப்- ஹரியானா விவசாயிகள் வருடக்கணக்கில் போராடியது தெரிந்தததே. இதற்கிடையில் பாஜக அரசுக்கு எதிராகப் போராடிய அனைத்து விவசாயிகளும் தனி நாடு கோரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கங்கனா பேசி வருகிறார்.
இதன் காரணமாகவே பெண் காவலர் கங்கானாவை கன்னத்தில் அறைந்ததாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து குல்விந்தர் கவுர் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் எம்.பி யாக உள்ள ஒருவரை தாக்கியதர்க்காக அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தான் தாக்கப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருந்த கங்கனா ரனாவத், தான் நலமாக உள்ளதாகவும், தன்னுடைய கவலை எல்லாம் பஞ்சாபில் வேகமாக வளர்ந்து வரும் தீவிரவாதத்தைப் பற்றியதே ஆகும் என்று தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு நடந்தது குறித்து பாலிவுட் பிரபலங்கள் மௌனம் காப்பது சரியல்ல என்றும் தெரிவித்திருந்தார்.
