Pa Ranjith : கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்… திமுக அரசை வெளுத்து வாங்கிய பா.இரஞ்சித்!

Advertisements

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என இயக்குனர் பா.இரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 35க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதோடு, பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்து இருக்கிறார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய், அரசைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில், இயக்குனர் பா.இரஞ்சித், தமிழக அரசின் அலட்சியத்தால் இத்தகைய கொடுந்துயரம் நடந்திருப்பதாகக் கூறி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது : “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக்கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்!

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!

மேலும், சமீப காலமாகத் தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின்குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துவோம்!” எனப் பதிவிட்டு உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *