
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்…
சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் காலைச் சிற்றுண்டி திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட திட்டங்கள்குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- அரசுக்கும், மக்களுக்கும் இடைவெளி ஏற்படாமல் மாநில திட்டக்குழு செயல்படுகிறது. விடியல் பயணம், காலை உணவுத் திட்டத்தின் தாக்கம்பற்றித் திட்டக்குழு அறிக்கை வழங்கியது பயனளித்தது. நான் முதல்வன் திட்டத்தின் தாக்கம்குறித்து ஆராய்ந்து திட்டக் குழு அறிக்கை அளிக்க வேண்டும். நான் முதல்வன் திட்டம்மூலம் 13 லட்சம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
விடியல் பயண திட்டம்மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 சேமிப்பு கிடைக்கிறது.மகளிர் உரிமை தொகை பெற்ற பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் பெண்களுக்குப் பொருளாதார சுதந்திரம் கிடைத்துள்ளது. புள்ளி விவரம் மட்டுமின்றி கள ஆய்வுகள்மூலம் ஆராய்ந்து அறிக்கை அளிக்க வேண்டும். அரசின் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



