D. Jayakumar:நடிகர்கள் யாரைக் கண்டு அஞ்சுகிறார்கள்? முன்னாள் அமைச்சர் கேள்வி!

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களைக் கலங்க வைக்கின்றன என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை:கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், திரைத்துறையை சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களைக் கலங்க வைக்கின்றன. இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்கள் யாரை கண்டு அஞ்சுகின்றனர். ஏழை எளிய மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால்தான் நீங்கள் ரூ. 100 கோடி,200 கோடிவரை சம்பளம் வாங்குகிறீர்கள். அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *