
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது தான் மழை, வெள்ள பாதிப்புகளை பார்க்க தமிழகம் முழுவதும் செல்லவில்லை. தூத்துக்குடியை மட்டுமே நான் பார்வையிட்டேன். தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யவில்லை என்று தெரிவித்தார்.
பொது மக்கள் கூறிய கருத்தை மட்டுமே நான் வெளிப்படுத்தினேன். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறிய கருத்து. அவர்கள் தான் முன்னெச்சரிக்கை குறித்தும் கூறினார்கள் என்றார். மேலும் தூத்துக்குடி எனது சொந்த ஊர். நான் போட்டியிட்டபோது எனக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களைப் பார்க்க சென்றது பாசத்தினாலும் மனிதாபிமானத்தினாலும் அங்கு சென்று அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினேன் என்று தெரிவித்தார்.
ஆனால் அமைச்சர் சேகர்பாபு கூறியது போல போட்டியிட செல்லவில்லை. தமிழக அரசில் தலையிடுவதற்காக செல்லவில்லை என்று தெரிவித்தார். மேலும் சபாநாயகர் அப்பாவு, இவர் யார் அங்கு ஆய்வு செய்வதற்கு? என கேள்வி எழுப்புகிறார். தி.மு.க.வை குற்றம் சொல்ல வேண்டும் என்பது எனக்கு துளியும் கிடையாது. ஆனால் திமுக தான் மனிதாபிமானத்தில் சென்றதை நூலை கயிறாகத் திரிகின்றனர் என்றார்.
மேலும் என் சகோதர, சகோதரிகள் துன்பத்தில் பங்கேற்க ஆறுதலுக்காக சென்றேனே தவிர, ஆய்வுக்காக செல்லவில்லை. இதை தி.மு.க.வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பேச வேண்டாம் என கூறினார்.
தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி பயணத்தை கண்டித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசியல் கட்சியை விமர்சிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் குறித்து தமிழிசை விமர்சித்து பேசியுள்ளார். இதனால் மத்திய அரசு அவரை கவர்னர் பதவியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் ஒரு கவர்னர், அதுவும் வேறு மாநிலத்திலிருந்து வந்து குறை கூறுவது ஏற்புடையதல்ல என்று கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர் .




