
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்…
தமிழ்நாடு அரசு சார்பில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில், அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து படிக்கலாம். இதில் படிக்க மாநிலம் முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பித்த நிலையில், 22 பேர் பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 3 பேர் பெண்கள் ஆவர்.
இந்த நிலையில் கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.
ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமெனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள் செல்லலாம்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


