பிக்பாஸ் பிரபலத்தை விமான நிலையத்தில் சுத்து போட்ட போலீசார்!
பாலியல் புகாரில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தைச் சென்னை விமான நிலையத்தில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள படன்னாவைச் சேர்ந்த 32 வயதான பெண் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் மலையாள பிக்பாஸ் பிரபலம் ஷியாஸ் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய ஷியாஸ், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னிடமிருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்ததாகவும் அந்தப் பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஷியாஸ் தன்னுடன் உறவின் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், எர்ணாகுளம் மற்றும் மூணாறில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்துத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கர்ப்பமான தன்னை ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார்.
இதனிடையே ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை அடுத்து, தான் அவரிடம் ஏமாந்த அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். அந்தப் பெண்ணின் புகாரை அடுத்து ஷியாஸ் கரீம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதால், வெளிநாட்டிலிருந்து சென்னை வந்த ஷியாஸ், சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இதையடுத்து சென்னை சுங்கத்துறையினர் கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஷியாஸை கைது செய்தனர். மலையாளத்தில் மோகன்லால தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஷியாஸ் வைல்ட் கார்ட் போட்டியாளராகப் பங்கேற்று பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்குத் தனி ரசிகர் பட்டாளமே உருவானது குறிப்பிடத்தக்கது.

