
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை;பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்கு பழி வாங்குவதற்கு அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியதாகப் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இதையொட்டி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரின் என்கவுண்டருக்கு பலியானார். கைதானவர்களில் அருள், மலர்கொடி, ஹரிஹரன், ஹரிதரன், சிவா ஆகியோர் வக்கீல்கள் ஆவார்கள்.
இந்தக் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் முழுமையாகக் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து போலீசாரின் கைது வேட்டை நீடித்தவண்ணம் உள்ளது. இந்த வழக்கில் தினம், தினம் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வருகிறது. இந்த வழக்கில் திரைமறைவிலிருந்து செயலாற்றியதாகப் பிரபல ரவுடிகள் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டுவரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளியான கிருஷ்ணன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வக்கீல் ஹரிஹரன் மற்றும் சிவாவுடன் நெருக்கமாக இருந்தவர்.
கொலை வழக்கில் ஹரிஹரன் கைது செய்யப்பட்டதும், கிருஷ்ணன், சிவா உட்பட 3 பேர் காரில் திருச்செந்தூர் சென்றுள்ளனர். பிறகு அங்கிருந்து மதுரை சென்ற கிருஷ்ணன், தனது காரைச் சிவாவிடம் கொடுத்துவிட்டு சென்னைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளார். சென்னைக்கு வந்த சிவாவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் கிருஷ்ணன் குடும்பத்துடன் டெல்லியிலிருந்து விமானம்மூலம் தாய்லாந்து தப்பிச் சென்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


