
தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.
இந்தக் கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளிலிருந்து மீளவில்லை.
தற்போது மழை குறைந்ததால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. நிவாரணப் பொருட்களை ஒருங்கிணைப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நிவாரணம் அளிக்க விரும்புவோர் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் உள்பட அனைத்து அரசுப் பேருந்துகளிலும் நிவாரண பொருட்களை இலவசமாக அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

