
வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறது..!
கடந்த 17, 18-ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பலத்த சேதத்தை எற்படுத்தியது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது மழை நின்றுள்ளதால் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளை சூழ்ந்திருந்த வெள்ளநீர் தற்போது மெல்ல வடிய தொடங்கியது. அதேபோல், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்த கனமழை வெள்ளத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிகனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்புகளை தற்போது ஆய்வு செய்து வருகிறது. அனைத்து பகுதிகளையும் ஆய்வுசெய்த வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.


