
சென்னை: ‛‛நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்குப் போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க., விற்கு இல்லை” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நிருபர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது: அந்தப் பாட்டுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக. ஜெயலலிதா இருக்கும்போது அதிமுக மேடைகளில் அந்தப் பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அன்றைக்கு தி.மு.க., வினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை. அதை நாங்கள் திருப்பிப் பாடும்போது கோபம் வருகிறது.
அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க., தான். ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிக் கருணாநிதி பேசி உள்ளார். கருவாட்டுகாரியின் சீமந்தபுத்திரர், மரமேறி கட்டபீடியென விமர்சித்துள்ளார்.
இழிவாகப் பேசுவதற்கு தி.மு.க., ஆட்களை வைத்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாகப் பேசுகின்றனர். நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்குப் போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க., விற்கு இல்லை.
சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்குத் தெரியாது. சண்டாளன் எனக் கிராமங்களில் இயல்பாகப் பேசுவர். சினிமா படங்களில் பாடல்கள் வந்துள்ளன.சங்க இலக்கியங்கள், மந்திரங்கள், கந்த சஷ்டியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.
சண்டாளன் என்ற வார்த்தையைக் கருணாநிதி அதிகமாகப் பயன்படுத்தி உள்ளார். படங்களிலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்தார்.
சண்டாளன் என நாங்கள் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போது எங்குச் சென்றீர்கள். காதில் பஞ்சுவைத்து படுத்துக் கொண்டீர்களா. இவ்வாறு சீமான் கூறினார்.


