Rajiv Gandhi Government General Hospital: இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு வலது கை அகற்றம்!

Advertisements

சென்னை அரசு மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு வலது கையை அகற்றியிருப்பதால் சிகிச்சையில் தவறு நேர்ந்திருக்கலாமெனச் சந்தேகம் எழுந்துள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத் என்பவரின் மனைவி ஜோதி. 32 வயதாகும் இவர் நெஞ்சு வலி காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

செப்டம்பர் 15ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த நாள அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்துள்ளனர். இதில் இதயத்தில் ரத்தநாள அடைப்பு பெரிய அளவில் இல்லை என்று கண்டறியப்பட்டது.

ஆனால், ஆஞ்சியோகிராம் செய்தபோது வலது கையும் இரண்டு கால்களும் கருப்பு நிறத்தில் மாறிவிட்டன. ரத்தம் உறைதல் காரணமாக, இவ்வாறு நிகழ்ந்திருப்பதை அறிந்த மருத்துவர்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக, செவ்வாய்க்கிழமை ஜோதியின் வலது கையை அகற்றிவிட்டனர்.

“தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் செய்ய அதிக கட்டணம் என்பதால் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். இங்கு இதய ரத்த நாள பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், கைக்கால்களில் ரத்தம் உறைதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வலது கையை அகற்றியுள்ளனர். ரத்தம் உறைதல் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டும் என்கிறார்கள்” ஜோதியின் கணவர் ஜீனாத் கூறுகிறார்.

“இதய பரிசோதனைக்காக வந்தால், கை, கால்களை அகற்றுகிறார்கள். டாக்டர்கள், தவறான மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது சிகிச்சையில் கவனக்குறைவான இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் எங்களுக்கு நியாயம் வேண்டும்” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

அண்மையில், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, பின்னர் தொடர் சிகிச்சை பலன் அளிக்காமல் அக்குழந்தை உயிரிழந்தது நினைவூட்டத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *