
பாராளுமன்றத்தில் விபி ஜி ராம் ஜி மசோதாவுக்கு எதிராக எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில், நடைபெற்ற பாராளுமன்றத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை, மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு, விபி ஜி ராம் ஜி என்று சுருக்கமாகப் பெயரிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, புதிய மசோதாவின் கீழ் வேலைவாய்ப்பு உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்துதல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய திட்டம் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அம்சங்களை கொண்டுள்ளதாகவும் கூறி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்தெறிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், நள்ளிரவு 12 மணி முதல் பாராளுமன்றம் முன் நின்று பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பினர். இதில், காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



