
மயிலாடுதுறை அருகே தனியார் பேருந்துப் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் வேன் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்…
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியில் பள்ளி தனியார் வேன் ஒன்று பள்ளிக் குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துக் கொண்டு அவர்களது வீடுகளில் இறக்கிவிட்டு பின்னர் மீண்டும் மயிலாடுதுறை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது வேன் ஒரு திருப்பத்தில் திரும்பிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக வேன்மீது மோதியது. இதில் வேனில் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சிதறியது. மேலும் வேன் ஓட்டுநர் துரை படுகாயமடைந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் வேன் ஓட்டுநரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி குழந்தைகளை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பும்பொழுது இந்த விபத்து நடைபெற்று உள்ளது. இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாகப் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் நடுரோட்டில் சிக்கிக் கொண்டிருந்த பேருந்து மற்றும் வேனை பிரித்து மீட்டு காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக மயிலாடுதுறை – சிதம்பரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

