
மணிப்பூரில் 2 குழுக்களிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் பலியான சம்பவத்தில், வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காகப் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இம்பால்:மணிப்பூரின் காங்கோபி மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களின் எல்லை பகுதியில் சினம் கோம் பகுதியில் இரு குழுவினர் இடையே நேற்றிரவு திடீரெனத் துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்தச் சம்பவத்தில், கிராமத்தில் தன்னார்வலராகச் செயல்பட்டு வந்த நபர் ஒருவர் காணாமல் போனார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த அவர் லைஷ்ராம் பிரேம் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வன்முறை பரவி விடாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாதுகாப்புக்காகப் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில், குகி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை பரவியது. அப்போது, பள்ளிகள், வீடுகள் எனக் கட்டிடங்கள் பல சூறையாடப்பட்டன. வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் ஆண்கள், பெண்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டனர். ஆண்களில் சிலர் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். பெண்களை இழுத்து சென்று, ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் கூடுதல் ராணுவ படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவு பெற உள்ள சூழலில், நேற்று மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் 2-வது கட்ட மக்களவை தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் ஆணையத்தின் செயலியின்படி, 2-வது கட்ட மக்களவை தேர்தலில் மணிப்பூரில் 78.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன எனத் தகவல் தெரிவிக்கின்றது.
இந்தச் சூழலில், மணிப்பூரின் பிஷ்ணுப்பூர் மாவட்டத்தில் நரண்சேனா பகுதியில் 128-வது பட்டாலியனை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, குகி பயங்கரவாதிகள் அவர்களை நோக்கித் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்தப் பயங்கரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 4 துணை ராணுவ படை வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், இரு குழுக்களிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அந்தப் பகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.



