
கனமழையின் காரணத்தால் கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தனர்.
தமிழக வடக்கு கடலோர பகுதியில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, கடலோரத்திலிருந்து உள் மாவட்டங்கள்வரை நீண்டுள்ளது. மேலும், அரபிக்கடலின் தென் கிழக்கில் வளிமண்டல கீழடுக்கில், மற்றொரு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது
நேற்று காலை வரையிலான காலத்தில், தமிழகம், புதுச்சேரியில், 5 இடங்களில், அதி கனமழையும்; 17 இடங்களில் மிகக் கனமழையும்; 55 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் வட்டக்காணல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 5 நாட்களாகப் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்தது.
இந்நிலையில் தற்பொழுது காலை 10 மணி முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.
எனவே தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

