EPS vs Stalin : ஓட்டை-உடைசல் பஸ்கள் இயக்கி மக்களின் உயிரோடு விளையாடுவதா!!

Advertisements

பழுதடைந்த பேருந்துகளைப் பழுதுபார்த்தும் மக்கள் அச்சம் இல்லாமல் பயணம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களுக்குச் சேவை செய்து சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியாத் திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது எனப் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வருகின்றன. 30 ஆண்டுகால அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்களின் சேவைத் துறையாக, லாப நஷ்ட கணக்கு பாராமல் போக்குவரத்துத் துறை செயல்பட்டது. தேவைப்படும்போதெல்லாம் பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு, புதிய பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர். திமுக ஆட்சி ஏற்பட்ட இந்த 36 மாத காலத்தில், அவ்வப்போது புதிய பேருந்துகள் வாங்கப்படுவதாகவும், இ-பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் விடியாத் திமுக அரசின் அமைச்சர் அறிக்கை வெளியிடுகிறாரே தவிர, புதிய பேருந்துகள் வாங்கியதாகத் தெரியவில்லை.

காலாவதியான பஸ்களை ஒட்டியே தீர வேண்டும் என்று ஊழியர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறதே தவிர, இதுவரை ஒரு பேருந்து கூட வாங்கப்பட்டதாகத் தெரியவில்லை. டயர் மற்றும் உதிரி பாகங்களை முறையாகக் கொள்முதல் செய்யாமல், பேருந்துகள் பழுது நீக்கப்படாமல், ஓட்டை-உடைசல் பஸ்கள் இயக்கப்பட்டு, இந்தத் திராவக மாடல் அரசு மக்களின் உயிரோடு விளையாடி வருகிறது. பஸ்களின் படிக்கட்டுகள் உடைந்து ரோட்டில் விழுகிறது. பேருந்துகளின் வீல்கள் தனியாகக் கழன்று ஓடுகின்றன. நடத்துனர் தன் இருக்கையோடு ஓடும் பஸ்சிலிருந்து சாலையில் விழுகிறார். பல பஸ்களில் இருக்கைகள் இருக்க வேண்டிய இடங்களில் பழைய டயர்களை போட்டு வைக்கிறார்கள்.

தற்போது, ஆங்காங்கே மழை பெய்யும் நிலையில், பேருந்துக்குள்ளேயும் மக்கள் குடைபிடிக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. மலைப் பிரதேசங்களிலும், நகரப் பகுதிகளிலும் பிரேக்டவுன் ஆகி நிற்கும் பஸ்களை பயணிகள் தள்ளிச் செல்லும் காட்சிகள் சர்வ சாதாரணமாகிவிட்டது. “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்றார் பேரறிஞர் அண்ணா. அதன் அர்த்தத்தை அனர்த்தமாக்கி தன் குடும்ப மக்கள் சேவைக்காக, விடியாத் திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின், அரசு போக்குவரத்துத் துறையையே காவு வாங்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாகப் பழைய பேருந்துகளை மாற்றிப் புதிய பேருந்துகளை மக்களின் பயன்பாட்டிற்காக இயக்க வேண்டும். நிதிப் பற்றாக்குறை என்ற பல்லவியை திரும்பத் திரும்பப் பாடாமல் கடன் வாங்கிய 3½ லட்சம் கோடியில், புதிய பேருந்துகளை வாங்குவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்திட வலியுறுத்துகிறேன். ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அதிக அளவில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். அவர்களின் உயிரோடு விளையாடாமல், அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்யும் வகையில் புதிய பேருந்துகளை வாங்கவும், பழைய பேருந்துகளை முறையே பழுதுபார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *