
எம் எல் ஏ சதாசிவத்தின் மனைவி மற்றும் மகளிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது மகன் சங்கரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்…
சேலம்: மருமகள் அளித்த வரதட்சணை புகாரில் சேலம் மேட்டூர் சட்டமன்ற பா.ம.க.உறுப்பினர் சதாசிவம் தனது மகன் சங்கருடன் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார். சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ சதாசிவம்.
இவரது மகன் சங்கர், மருமகள் மனோலியா. கடந்த 2019-ம் ஆண்டில் திருமணமான இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கணவர் வீட்டார் வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்துவதாக மனோலியா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாகக் கணவர் சங்கர், எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சதாசிவம், சங்கர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சதாசிவம் தரப்பில், தனது மகனும், மருமகளும் கடந்த பிப்ரவரி முதல் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், தவறான குற்றச்சாட்டில் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை தரப்பில், விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும், மனுதாரர்கள் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.அதையடுத்து நீதிபதி, வரதட்சணைக் கொடுமை வழக்கில் வரும் 4-ம் தேதி காலைச் சூரமங்கலம் காவல் நிலையத்தில் சதாசிவம் தனது குடும்பத்தாருடன் ஆஜராக உத்தரவிட்டு, முன்ஜாமீன் வழக்கு விசாரணையை வரும் 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராகும் படி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் சதாசிவம் குடும்பத்தினர் சூரமங்கலம் அனைத்து காவல் நிலையத்தில் ஆஜரானார்கள்.எம் எல் ஏ சதாசிவத்தின் மனைவி மற்றும் மகளிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், எம்எல்ஏ சதாசிவம் மற்றும் அவரது மகன் சங்கரிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் வரதட்சனை புகாரில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம் குடும்பத்துடன் காவல்நிலையத்தில் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


