
வாஷிங்டன்: அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் புதிய பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். நவ., 5ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில் டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அழகி ஸ்டேசி வில்லியம்ஸ் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி: 1993ம் ஆண்டு டிரம்ப் என்னைப் பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

1992ம் ஆண்டு ஒரு கிறிஸ்துமஸ் விருந்தில் ட்ரம்பை முதன்முதலில் சந்தித்தேன். அப்போது எனது நண்பரான எப்ஸ்டின் உடன் இருந்தார். அவரிடம் பேசிக் கொண்டே என்னிடம் டிரம்ப் பாலியல் ரீதியாக அத்துமீறினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் வாய் திறந்து பேச முடியாத துயர நிலைக்கு ஆளானேன்.
இதுபற்றி அப்போதே எனது நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து ட்ரம்ப் இடம் இருந்து எனக்கு ஒரு போஸ்ட் கார்டு மட்டும் வந்தது. இவ்வாறு ஸ்டேசி தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தப் புதிய குற்றச்சாட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கான செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை கிடையாது. இது பொய். இந்தப் போலிக் கதை ஹாரிஸ் ஆதரவாளர்களால் திட்டமிட்டு கூறப்படுகிறது என்றார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது இதுவரை 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.
சமீபத்தில் ஜீன் கரோல் என்கிற 79 வயதான, டிரம்ப்பைவிட மூன்று வயது மூத்த பெண் ஒருவர் டிரம்ப் தன்னை வன்புணர்வு செய்ய முயன்றதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த வழக்கில் தற்போது டிரம்ப் குற்றவாளியென அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



