Crime: 2 குழந்தைகளை கொலை செய்து தாய் தூக்கிட்டு தற்கொலை!

Advertisements

விழுப்புரம் விக்கிரவாண்டியில் வசித்து வருபவர் 35 வயது கோபிநாத். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சென்னையில் தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வந்தார் விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் வசித்து வரும் 29 வயது பென்னரசியை காதலித்தார்.

இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி விக்கிரவாண்டியில் வீடு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் கிருத்திகா என்ற மகளும், 4 வயதில் மோனிஷ் என்ற மகனும் உள்ளனர். இதற்கிடையே கோபிநாத் அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கும் படித்து கொண்டிருந்தார்.

இதற்காக ஒரு பயிற்சி நிறுவனத்தில் பகுதி நேரத்தில் படித்து வந்தார். அத்துடன் இவரது தந்தை நாகராஜ், தம்பி தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து மர இழைப்பகமும் நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் காலை கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் விழுப்புரத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக சென்றார். பிரார்த்தனை முடிந்ததும் கோபிநாத் தனது மனைவி, குழந்தைகளை விக்கிரவாண்டி செல்லும் பேருந்தில் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர், தான் பயிற்சி பெறும் பயிற்சி நிலையத்துக்கு சென்றுவிட்டார்.

பயிற்சி முடிந்ததும் காலை 10.45 மணிக்கு கோபிநாத் வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் பதறிய கோபிநாத், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு பென்னரசி, கிருத்திகா, மோனிஷ் ஆகியோர் தனித்தனி துப்பட்டாவில் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்து கோபிநாத் கதறித் துடித்தார். அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கோபிநாத் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் மனைவி பென்னரசி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டே இருப்பதால் கோபிநாத் கண்டித்துள்ளார். அத்துடன் அவரது செல்போனை வாங்கி உடைத்து விட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பென்னரசி 2 குழந்தைகளையும் தனித்தனி துப்பட்டாவால் தூக்கிட்டு கொலை செய்து விட்டு, தானும் மற்றொரு துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *