
காவிரியில் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது…
புதுடில்லி: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகுறித்து சட்ட வல்லுநர்கள், கர்நாடக மாநில அனைத்து கட்சி எம்.பி, க்களுடன் டில்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆலோசனை நடத்தினார்.
காவிரியில் தமிழகத்திற்கு மேலும் 15 நாட்களுக்கு விநாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. காவிரி நீர் விவகாரம் தொடர்பாக, டில்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழக எம்.பி., க்கள் குழுவினர் நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர். இன்றுகர்நாடக அனைத்துக்கட்சி எம்.பி., க்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.இவர்கள், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தையும் சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.


