பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் , எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் போராட்டம்!

Advertisements

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ள 26 எதிர்க்கட்சிகள் இணைந்து “இந்தியா” என்ற புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறையில் இன்று காலை நடந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பாராளுமன்ற இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இது தொடர்பான பேனர்களையும், பதாகைகளையும் வைத்து இருந்தனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதா எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பா.ஜனதா பெண் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *