
புதுடில்லி: வங்கதேசத்தில் நவராத்திரியை முன்னிட்டு வைக்கப்பட்டு இருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்குறித்து மத்திய அரசுக் கவலை தெரிவித்து உள்ளது.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டாக்காவில் துர்கா சிலை அருகே குண்டு வீசப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவை வருந்தத்தக்கது.
கோயில்களையும், தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை ஒரு திட்டமிட்ட வேலையாகச் செய்கின்றனர். இதனை நாங்கள் பல நாட்களாகக் கவனித்து வருகிறோம். புனிதமான இந்தப் பண்டிகை காலத்தில், ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வங்கதேச அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


