
குரல்வளை பாதிப்பு ஏற்பட்டு, தொடர் இருமல் வருவதால், போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லையென மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பல வருடஙகளாக வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன் எனக் கலக்கிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். அண்மையில் லியோ படத்தில் கூட நடித்திருந்தார். இவர் அப்படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து பேட்டி ஒன்றில் கொச்சையாகப் பேசி இருந்தார். அவரின் இந்தப் பேச்சைக்கேட்டு கடுப்பான நடிகை திரிஷா, கடும் கண்டனம் தெரிவித்ததிருந்தார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் திரிஷாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என டிஜிபி-க்கு மகளிர் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
போலீஸ் நோட்டீஸ் அனுப்பியும் மன்சூர் அலிகான் இன்று காலை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகவில்லை. அதுமட்டுமின்றி அவரது வீடும் பூட்டு போட்டுப் பூட்டப்பட்டு இருப்பதால் மன்சூர் அலிகான் தலைமறைவு ஆகிவிட்டாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கியது.
இந்த நிலையில், தான் விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து மன்சூர் அலிகான் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தனக்கு குரல்வளை பாதிப்பு ஏற்பட்டு, தொடர் இருமல் வருவதால், போலீஸ் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லையென அவர் தெரிவித்துள்ளார். மறுபுறம் தனக்கு முன் ஜாமின் வழங்கக்கோரி மன்சூர் அலிகான் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்ப்ட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

