
தமிழகத்தில் இந்த மாதம் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கத் தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
நாள்தோறும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டிப் பதிவாகி உள்ளது. இந்த மாத தொடக்கத்திலிருந்து டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆகப் பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

