Amit Shah:100 நாளில் ரூ.3 லட்சம் கோடி திட்டங்களுக்கு ஒப்புதல்; கணக்கு போட்ட அமித்ஷா!

Advertisements

புதுடில்லி: ‘பா.ஜ., அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி பதவியேற்றார். மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்று 100 நாட்களைக் கடந்த நிலையில் அரசின் சாதனைகுறித்து அமித்ஷா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் ஆரோக்கியத்திற்காக நாடே வழிபடுகிறது. எளிமையான குடும்பத்தில் பிறந்த மோடி உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டை ஆள்கிறார். இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைப் பா.ஜ., அரசு உருவாக்கித் தந்துள்ளது.

மெகா துறைமுகம்
மேக் இன் இந்தியா திட்டம் முதல் புதிய கல்வி கொள்கைவரை பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். பா.ஜ., தலைமையிலான தே.ஜ.கூட்டணி அரசு தனது முதல் 100 நாட்களில், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.15 லட்சம் கோடிக்குத் திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் உள்ள மெகா துறைமுகத்திற்கு ரூ.76,200 கோடிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது, இது உலகின் முதல் 10 துறைமுகங்களில் ஒன்றாக இருக்கும். 25,000 கிராமங்களை இணைக்கும் வகையில் 62,500 கிமீ சாலைகள் மற்றும் பாலங்கள் கட்டுவதற்கு, மேம்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எங்கள் இலக்கு
விவசாயத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதையும் ஸ்டார்ட் அப்கள் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

60 கோடி இந்தியர்களுக்கு வீடுகள், கழிவறைகள், குடிநீர், மின்சாரம் ஆகியவை கிடைத்துள்ளன. நாட்டில் சொந்த வீடு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்பதே எங்கள் இலக்கு. அடுத்த 15 நாட்களுக்கு ஏழைகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *