
இந்தியாவில் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய யுபிஐ ஏடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை: மும்பையில் நடந்த சர்வதேச ஃபின்டெக் ஃபெஸ்ட் நிகழ்வில், இந்தப் புதிய ஏ.டி.எம். எந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ ஒன்றை மத்திய மந்திரி பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் வல்லுனர் ஒருவர் ஏ.டி.எம்.எந்திரத்தில் யு.பி.ஐ. பயன்படுத்தி எப்படி பணம் எடுக்க வேண்டும் என்பதை விவரிக்கிறார். இந்த வீடியோவுக்குப் பியூஷ் கோயல், “யு.பி.ஐ. ஏ.டி.எம்.: ஃபின்டெக் இங்கே தான் இருக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது, பல வங்கிகள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை வழங்குகின்றன. அதே வசதியைத்தான் இந்த யுபிஐ-ஏடிஎம் வழங்குகிறது. மற்ற வங்கிகள் வழங்கும் வசதி, மொபைல் மற்றும் ஓடிபி-ஐ அடிப்படையாகக் கொண்டது. ஆனால், யுபிஐ-ஏடிஎம் எந்திரமானது, க்யூஆர் கோட் மற்றும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தி பணம் எடுப்பதை அடிப்படையாகக் கொண்டது. இந்த யுபிஐ ஏடிஎம்-கள் பல இடங்களில் வைக்கப்பட்டவுடன், பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஏடிஎம்களுக்கு எடுத்துச் செல்வது குறைந்துவிடும்.

யுபிஐ-ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுப்பது எப்படியெனப் பார்ப்போம். முதலில், ஏடிஎம்-ல் இருந்து எடுக்க விரும்பும் தொகையைத் தேர்ந்தெடுத்து குறிப்பிட வேண்டும். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தொகைக்கான க்யூஆர் குறியீடு (QR code) திரையில் தெரியும். மொபைல் போனில் உள்ள யுபிஐ (UPI) செயலியைப் பயன்படுத்தி அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் பணப் பரிவர்த்தனையை அங்கீகரிக்க மொபைலில் உங்கள் யுபிஐ பின் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். யுபிஐ பின் எண் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஏடிஎம் எந்திரத்திலிருந்து பணம் வெளியே வரும்.


