
சென்னை: ‘வங்கக் கடலில் வரும் அக்., 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது’ என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில், தற்போது வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இது தீவிரமடைந்து வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வரும் அக்., 14ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்று (அக்.,12) முதல் அக்டோபர் 16ம் தேதிவரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக்.,12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அக்டோபர் 13 மற்றும் 14ம் தேதிகளில், தமிழகத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகாக, ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. காரைக்குடியில் அதிகபட்சமாக, 154 மில்லி மீட்டர் மழை பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.


