Smuggling: காரில் ரகசிய அறை; ரூ.180 கோடி போதைப் பொருள் சிக்கியது!

Advertisements

இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருளைக் கியூ பிரிவு காவல் துறையினர் வேளாங்கண்ணியில் பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாகக் கியூப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பூக்கார தெருவில் உள்ள தனியார் விடுதியில் க்யூப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராமச்சந்திர பூபதி தலைமையில் காவல் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விடுதியில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம் கியாபரி பகுதியைச் சேர்ந்த தில்குமார் தாபா மங்கர், கவாஸ் ஆகியோரிடம் க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து ஹசிஸ் போதை பொருளை ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதற்காக மேற்குவங்க மாநிலத்திலிருந்து காரில் ரகசிய அறை அமைத்து அதில் போதை பொருளைக் கடத்தியதும், அதிக தூரம் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட அசதி காரணமாக வேளாங்கண்ணியில் தங்கியதும் தெரியவந்தது. மேலும் இன்று அதிகாலை ராமேஸ்வரத்தில் போதை பொருளைக் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் காரில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த 75 கிலோ ஹசிஸ் போதை பொருளையும் க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட ஹதீஸ் போதைப் பொருளுடன் ஹெராயின் கலந்து பிரவுன் சுகர் ஆக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஹசிஸ் போதைப் பொருளுக்குச் சர்வ சர்வதேச சந்தையில் 180 கோடி ரூபாய் மதிப்பு எனவும், இந்திய சந்தையில் 3 கோடியே 75 லட்ச ரூபாயெனப் போலீசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட போதை பொருட்களைப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *