Revanth Reddy: சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை விடக் கூடாது.. காங்கிரஸ் முதல்வர் அதிரடி!

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது. அது அவருடைய சிந்தனையெனத் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும், அதைப் போலத் தான் இந்தச் சனாதனமும் அதை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சு தேசிய அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அவரது பேச்சுக்கு இந்து அமைப்புகளும், பாஜகவினரும், இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் பீகார், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு அடங்களில் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.  அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகத் தெலங்கானா மாநில முதல்வர் கூறிய கருத்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *